மதுரையில் கர்ப்பமாகி, சென்னையில் குழந்தை பெற்ற சிறுமி.. தகாத உறவால் வந்த விபரீதம்


மதுரையில் கர்ப்பமாகி, சென்னையில் குழந்தை பெற்ற சிறுமி.. தகாத உறவால் வந்த விபரீதம்
x

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக சேர்த்தனர்.

போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த குழந்தையை தெருவில் வீசி சென்ற தாய் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. குழந்தையை பெற்றெடுத்தது 17 வயது சிறுமி என்பதும் கண்டறியப்பட்டது. அந்த சிறுமியின் பெற்றோர் கண்பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள். மதுரையை சேர்ந்தவர்கள். அங்கு வாலிபர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இந்த விசயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய பெற்றோர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தங்களது மகளை சென்னைக்கு அழைத்து வந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டு சிறுமி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் சத்தமில்லாமல் அந்த குழந்தையை தெருவில் வீசிவிட்டனர்.

திருவல்லிக்கேணி போலீசார் தற்போது அந்த சிறுமியையும், அவர் பெற்றெடுத்த குழந்தையையும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மதுரையில் வசிக்கிறார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story