புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும்


புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பிறப்பு, இறப்பு பதிவு, அரசு சான்றிதழ்கள், விவசாய நிலங்கள் சம்பந்தமான பட்டா, சிட்டா ஆகியவைகளை பெற்று வருகின்றனர். மிகவும் பழமையான ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லை. இதனால் மழை,வெயில் காலங்களில் இங்கு அலுவல் தொடர்பாக வரும் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் ரெயில்வே நிலையம், பறவைகள் சரணாலயம், அரசு பள்ளிகள் போன்றவைகள் உள்ளிட்ட முக்கியமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவை தொடர்பான முக்கிய ஆவணங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முக்கிய ஆவணங்கள்

ஓட்டு கட்டிடத்தில் இருப்பதால் இதில் இருக்கும் முக்கிய ஆவணங்கள் திருட்டு போவதற்கும், மழை காலங்களில் சேதம் அடைவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அலாவுதீன் கூறுகையில் முக்கிய ஆவணங்கள் பல கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருப்பதால் அதனை உடனடியாக பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அரசு முன்வர வேண்டும். மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இதனை சரி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


Next Story