அரசு சார்பில் கிண்டியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது


அரசு சார்பில் கிண்டியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது
x

சென்னை கிண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

சென்னை,

தமிழகத்தின் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம் இளைஞர்கள் அதிகளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இன்று நடக்கிறது

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

இந்த முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

வேலைவாய்ப்பு பதிவு ரத்தாகாது

முகாமில் 8- ம் வகுப்பு, 10- ம் வகுப்பு, 12- ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story