நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா


தினத்தந்தி 28 March 2023 9:00 PM GMT (Updated: 28 March 2023 9:00 PM GMT)

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழாவில், கிடாய் வெட்டி கறி விருந்து நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழாவில், கிடாய் வெட்டி கறி விருந்து நடந்தது.

வேட்டைக்காரன் சுவாமி கோவில்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. மழை வளம் வேண்டி இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பாரம்பரியமாக நடந்து வரும் இந்த திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதையொட்டி வேட்டைக்காரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக கிடாய்களை கொண்டு வந்தனர்.

கம, கம வாசனை

விவசாயம் செழித்து தானிய உற்பத்தி அதிகரிப்பு, ஆடு, மாடுகள் பெருக்கம் ஆகியவற்றுக்காக சில பக்தர்கள் கிடாய்களை நேர்த்திக்கடனாக செலுத்தினர். குழந்தை பாக்கியம் கிடைத்ததற்காக கிடாய்களை சிலர் கொண்டு வந்தனர். அதன்படி மொத்தம் 36 கிடாய்கள் நேர்த்திக்கடனாக வேட்டைக்காரனுக்கு செலுத்தப்பட்டது.

பக்தர்கள் கொண்டு வந்த கிடாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக பலியிடப்பட்டன. அதன்பிறகு இரவில் கோவில் வளாகத்திலேயே சமையல் செய்யும் பணி தொடங்கியது. விடிய, விடிய இந்த பணி நடந்தது.

கறி, தலை, குடல், எலும்பு, தோல் ஆகியவை தனித்தனியாக கம, கம வாசனையுடன் தயாரானது. இதேபோல் சோளம், கம்பு, வரகு, நெல் அரிசி ஆகியவை சமைக்கப்பட்டன. நேர்த்திக்கடன் செலுத்திய ஆடுகளின் ஈரல்கள் தனியாக சமைக்கப்பட்டது. அவை வேட்டைக்காரன் சுவாமிக்கு படையலிடப்பட்டது.

நீண்ட வரிசையில்...

இதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணி அளவில் கறி விருந்து தொடங்கியது. பந்தியில் அமர்ந்து அங்கு சாப்பிட அனுமதி கிடையாது. கோவிலில் வாங்கிய சாப்பாடு, கறி, குழம்பு ஆகியவற்றை தங்களது வீடுகளுக்கே எடுத்து சென்று சாப்பிட்டனர்.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாப்பாடு, கறி, குழம்பு வழங்கப்பட்டது. நத்தம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் வந்திருந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான உணவை தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் வாங்கி சென்றனர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த விருந்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை உலுப்பகுடி கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story