போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி திருட்டு


போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி திருட்டு
x

பட்டுக்கோட்டையில், போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சாரதாம்பாள் (வயது 72). இவர் நேற்று பட்டுக்கோட்டை பெரிய தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வளவன்புரம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை இடைமறித்த மர்ம நபர்கள் 2 பேர், சாரதாம்பாளிடம் தாங்கள் போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். அப்போது அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது நகைகளை அணிந்து செல்லக்கூடாது, நகையை கழற்றி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

2 பவுன் நகை திருட்டு

அவர்களை உண்மையான போலீஸ் என்று நம்பிய சாரதாம்பாள், அவர்களது யோசனைப்படி கழுத்தில் அணிந்திருந்த தன்னுடைய 2 பவுன் சங்கிலியை கழற்றி பேப்பரில் மடித்தார். அதனை பெற்ற அந்த 2 மர்ம நபர்களும் மூதாட்டியின் பையில் வைப்பது போல நடித்து பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள், வீட்டிற்கு சென்றவுடன் எடுத்து அணிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். வீட்டுக்கு சென்றதும் பையை திறந்து பார்த்தபோது அவர் மடித்து வைத்திருந்த 2 பவுன் சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார். அப்போது அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் சாரதாம்பாள் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் 2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story