தடைக்காலம் முடிவடைந்தும் ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைந்தது; வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,200 விற்பனை


தடைக்காலம் முடிவடைந்தும் ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைந்தது; வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,200 விற்பனை
x
தினத்தந்தி 18 Jun 2023 9:08 PM GMT (Updated: 19 Jun 2023 1:12 AM GMT)

தடைக்காலம் முடிவடைந்தும் ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.

ஈரோடு

தடைக்காலம் முடிவடைந்தும் ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2 மாதங்களாக அமலில் இருந்தது. இதனால் ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. கேரளா மாநிலத்தில் இருந்து மட்டுமே கடல் மீன்கள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைந்ததால் மீன்களின் விலையும் உயர்ந்தது.

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் ஈரோட்டுக்கு மீன்களின் வரத்து அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீன்களின் வரத்து இந்த வாரமும் குறைவாகவே காணப்பட்டது. பொதுவாக வார இறுதி நாட்களில் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு 15 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் மீன்பிடி தடைக்காலம் இருந்தபோது 5 டன் மட்டுமே மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அதுபோல் இந்த வாரமும் 5 டன் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விலை குறையவில்லை

வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலையும் குறையவில்லை. அடுத்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருக்கும் என்றும், அதனால் விலை குறைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் வியாபாரிகள் கூறினர்.

ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அயிலை - ரூ.300, மத்தி - ரூ.200, வஞ்சிரம் - ரூ.1,200, விலாங்கு மீன்- ரூ.500, பாறை - ரூ.500, முரல் - ரூ.450, இறால் - ரூ.550, சீலா - ரூ.450, கவுரி - ரூ.600, வெள்ளை வாவல் - ரூ.1,000, கருப்பு வாவல் - ரூ.800, மயில் மீன் - ரூ.600, கிளி மீன் - ரூ.600, மதன மீன் - ரூ.500, மஞ்சள் கிளி மீன் - ரூ.300

இதேபோல் ஒரு கிலோ நண்டு ரூ.400-க்கு விற்பனையானது.


Next Story