அடுத்தடுத்து அ.தி.மு.க.வில் இணையும் அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகள்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி ஆர்.மனோகரன் இன்று அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை,
கடந்த 2 மாதங்களில் அ.ம.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அ.ம.மு.க. மாநில இளைஞரணி செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ந்தேதி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும், மதுரை மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி சசிகலா ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவனும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அவர்களைத் தொடர்ந்து, அ.ம.மு.க. மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இணைந்தார். அண்மையில் அ.ம.மு.க. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மனுமான மா.சேகர் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க. முக்கிய நிர்வாகியுமான திருச்சி ஆர்.மனோகரன், இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். கடந்த 2011-16 காலகட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.மனோகரன், அதன் பின்னர் அ.ம.மு.க.வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.