மண்ணச்சநல்லூரில் சாவிலும் இணைபிரியாத தம்பதி


மண்ணச்சநல்லூரில் சாவிலும் இணைபிரியாத தம்பதி
x

மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் இறந்தார்.

திருச்சி

திருச்சி பாலக்கரை இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 91). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இவர்களுக்கு ரவீந்திரன், மோகன், ஆறுமுகம் ஆகிய 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாதநகரில் உள்ள மூத்த மகன் ரவீந்திரன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள 3-வது மகன் ஆறுமுகம் வீட்டிலும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சம்பூரணத்தம்மாள் வயது முதிர்வு காரணமாக உயிர் இறந்தார்.இதைத்தொடர்ந்து தாய் இறந்து விட்ட சம்பவத்தை அண்ணன் ரவீந்திரனிடம் ஆறுமுகம் கூறியுள்ளார். மேலும் தாயாரின் விருப்பப்படி மண்ணச்சநல்லூரில் உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தாயார் இறந்த சம்பவத்தை ரவீந்திரன் தனது தந்தை கிருஷ்ணனிடம் கூறியுள்ளார். மனைவி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

இதனால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் கொண்டுவரப்பட்ட சம்பூரணத்தம்மாள், கிருஷ்ணன் ஆகியோரின் உடல்கள் அருகருகே கண்ணாடி பெட்டியில் பொதுமக்கள் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் இருவரின் உடல்களும் தனித்தனியே எரியூட்டப்பட்டது. மனைவி இறந்த ஒரு மணிநேரத்தில் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story