தனியார் பள்ளி பஸ் மீது கல்வீசி தாக்கியவர் கைது
![தனியார் பள்ளி பஸ் மீது கல்வீசி தாக்கியவர் கைது தனியார் பள்ளி பஸ் மீது கல்வீசி தாக்கியவர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/02/21/1152608-arrested.webp)
அய்யலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). இவர் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பஸ்சில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வடமதுரைக்கு வந்தார். வடமதுரையில் உள்ள காவிரி குடிநீர் தொட்டி அருகே பஸ்சை நிறுத்தி நாகராஜ் மாணவர்களை இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர் பஸ்சை இங்கே எப்படி நிறுத்தலாம்? என கேட்டு நாகராஜிடம் தகராறு செய்தார். மேலும் ஆத்திரமடைந்த அந்த நபர், நாகராஜை தாக்கியதுடன், கல்லால் பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து நாகராஜ் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பஸ் மீது கல்வீசி தாக்கியவர் வடமதுரை தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.