விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் தர்ணா


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் தர்ணா
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:45 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவபஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் சுபாஷ், தொகுதி தலைவர் முருகன், இளைஞரணி தலைவர் அம்பேத்கர், தொகுதி செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாதம்பாளையம் சுடுகாடு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், சாலையாம்பாளையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான பூவரசு, கொடுக்காப்புளி, வேலம், வேப்பம் உள்ளிட்ட மரங்களை வெட்டி திருடிய நபர்கள் மீதும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அரசு அலுவலர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களை மனு கொடுப்பதற்காக கலெக்டரிடம் அனுப்பி வைத்தனர். அதன்பேரில் அவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story