பெரியாரை பாஜக எங்கேயும் அவமதிக்கவில்லை - அண்ணாமலை பேட்டி


பெரியாரை பாஜக எங்கேயும் அவமதிக்கவில்லை - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2023 7:59 AM GMT (Updated: 9 Nov 2023 11:01 AM GMT)

பாஜக என்ற கொக்கு காத்திருந்து 2026ல் ஆட்சியை பிடிக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை,

சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

'கோவில்களுக்கு முன்னால் பெரியார் சிலை இருக்கக்கூடாது என்பதே பாஜகவின் கருத்து. பெரியார் கூறிய கடவுள் மறுப்பு வாசகம் கோவிலுக்கு வெளியே உள்ள சிலையில் இடம்பெற்றுள்ளது. பெரியார் சிலையை பொது இடத்தில் வைத்து போற்றிக்கொள்ளட்டும்.

பெரியாரை பாஜக எங்கேயும் அவமதிக்கவில்லை, அவருக்கு என்ன கவுரவம் கொடுக்க வேண்டுமோ அதை கொடுப்போம். பாஜக ஆட்சியில் தலைவர்கள் சிலை பொது இடத்திற்கு மாற்றப்படும், அவர்கள் சிலைக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும்

இந்து அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்பதை பாஜக ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தும். வேங்கைவயல் சம்பவத்தில் 300 நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாஜக என்ற கொக்கு காத்திருந்து 2026ல் ஆட்சியை பிடிக்கும்.

பெண்கள் குறித்து பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி ஏன் பேசவில்லை?. இந்தியா கூட்டணியில் இல்லை என்றால் ஒரு ஓட்டு கூட வராது என்ற பயம் தான்.'

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story