பா.ஜ.க. பிரமுகரின் கார் மோதி, அதிகாரி பலி
![பா.ஜ.க. பிரமுகரின் கார் மோதி, அதிகாரி பலி பா.ஜ.க. பிரமுகரின் கார் மோதி, அதிகாரி பலி](https://media.dailythanthi.com/h-upload/2022/05/31/715908-acc.webp)
திருப்புவனம் அருகே பா.ஜ.க. பிரமுகர் கார் மோதி துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பரிதாபமாக இறந்தார்
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே பா.ஜ.க. பிரமுகர் கார் மோதி துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருப்பாச்சேத்தி ஆவரங்காடு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவரது மனைவி மலையம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முருகன் திருப்புவனம் யூனியனில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். மலையம்மாள் மதுரை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் முருகன் நேற்று முன்தினம் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வரும்போது மீன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் மதுரை-ராமேசுவரம் மெயின் ரோட்டில் மாரநாடு பாலம் அருகே சென்றார்.
கார் மோதி பலி
அப்போது அந்த வழியாக திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் பிரபாகரன் (48) காரில் வந்தார். இந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் முருகன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து முருகனின் மனைவி மலையம்மாள், திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கவிதா மற்றும் போலீசார், கார் டிரைவர் பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.