பூட்டை உடைத்து 4 பவுன் நகை-பணம் திருட்டு
![பூட்டை உடைத்து 4 பவுன் நகை-பணம் திருட்டு பூட்டை உடைத்து 4 பவுன் நகை-பணம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/08/12/820873-robbery-1.webp)
தக்கலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை-பணம் திருட்டு
தக்கலை,
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு, தைக்கா பள்ளி தெருவை சேர்ந்தவர் அப்துல்காசிம் (வயது 70). இவருடைய மனைவி இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அப்துல்காசிமின் வீட்டின் அருகிலேயே அவரது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்துல்காசிம் பகலில் பூர்வீக வீட்டில் இருந்து விட்டு இரவு மகன் வீட்டுக்கு தூங்கச் செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் பூர்வீக வீட்டை பூட்டி விட்டு மகன் வீட்டுக்கு தூங்கச் சென்றார். நேற்று காலையில் அப்துல்காசிம் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அப்துல்காசிம் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.