கல்லூரி பெண் விரிவுரையாளரிடம் செயின் பறிப்பு


கல்லூரி பெண் விரிவுரையாளரிடம் செயின் பறிப்பு
x

குடியாத்தத்தில் நடந்து சென்ற கல்லூரி பெண் விரிவுரையாளரிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

குடியாத்தத்தில் நடந்து சென்ற கல்லூரி பெண் விரிவுரையாளரிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செயின் பறிப்பு

குடியாத்தம் செதுக்கரை ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் உஷா (வயது 35). இவர் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் கல்லூரி வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றார். ராஜிப்பட்டி வழியாக செதுக்கரைக்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் உஷா கழுத்திலிருந்து 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.

இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் போலீசார் விரைந்து வந்து செயின் பறிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் சுற்றுப்பகுதியில் உள்ள பரதராமி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

கண்காணிப்பு கேமரா

மேலும் செயின் பறிப்பு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு அதில் பதிவான பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் நகரம் முழுவதும் சுமார் 95 கேமராக்கள் பொது மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. இதில் 15-க்கும் குறைவான கேமராக்களே வேலை செய்கிறது. பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்வதில்லை. இதனால் திருட்டு சம்பவங்கள் குறித்து துப்பு துலக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


Next Story