முதல்-அமைச்சர் வருகை: நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை


முதல்-அமைச்சர் வருகை: நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 28 April 2024 4:47 AM GMT (Updated: 28 April 2024 5:12 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது. இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) செல்கிறார்.

அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி நாளை முதல் வருகிற மே 4-ந் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.


Next Story