புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

சாலை வசதி தேவை

மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங்போர்டு 84-வது வார்டு சித்தர் தெருவில் சரியான சாலை வசதி இல்லை. மண் சாலையாக காணப்படுவதால் சிறிய மழை பெய்தாலும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சரியான சாலை வசதி அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ், வில்லாபுரம்.

கால்நடைகளுக்கு கோ-சாலை அமைக்கப்படுமா?

மதுரை ஒத்தக்கடை மேலூர் மெயின் ரோட்டில் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகள் மீது வாகனஓட்டிகள் சிலர் மோதிவிட்டு நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் கால்நடைகள் விபத்தில் சிக்கி காயமடைவதுடன் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கோ சாலை அமைத்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பாண்டியன், ஒத்தக்கடை.

சாலையில் பள்ளம்

மதுரை அனுப்பானடி- தெப்பகுளம் சாலை சந்திக்கும் இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படால் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், அனுப்பானடி.

விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை வைகை வடகரை ஆற்றின் ஓரமாக ஓபுளாபடித்துறை பாலம் முதல் ஆழ்வார்புரம் வரை உள்ள விரிவாக்க சாலையில் மணல்கள் அதிக அளவில் உள்ளது. சாலை குறுகலான இந்த இடத்தில் மணல் அதிகமாக உள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வைகை வடகரை கரையோர சாலையில் மணல் குவியலை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி, மதுரை.

வாகன காப்பகம் வேண்டும்

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடமின்றி அவதியடைகின்றனர். எனவே பஸ் நிலையம் அருகில் பல அடுக்கு வாகன காப்பகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆரப்பாளையம்.

எரியாத தெருவிளக்குகள்

மதுரை மாவட்டம் கே.புதூர் ராமலட்சுமி மெயின்ரோடு மூன்றுமாவடி 12-வது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் தெருவிளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்த்திபன், புதூர்.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கடியால் சிலர் அவதியடையும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாண்டாங்குடி, மதுரை.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர்நகர் ரெயில்வே பாலம் அருகே குப்பை மற்றும் உணவு கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுகளால் இப்பகுதி சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், அதனை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

பெயர் பலகை வேண்டும்

மதுரை நடராஜ்நகர் சாலை இருபுறமும் தெருக்கள் முக்கிய சாலையாகும். இந்த பகுதியில் உள்ள சரஸ்வதி தெருவில் பெயர் பலகை வைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீதிகள் தெரியாமல் குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தெருவில் பெயர்பலகை அமைக்க அதிகாரிகள் நடடிக்கை எடுக்க வேண்டும். முத்துரத்தினம், மதுரை.


Next Story