பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பூரில் டிரோன்கள் பறக்க தடை


பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பூரில் டிரோன்கள் பறக்க தடை
x

பல்லடம் பொதுக்கூட்ட மைதானத்தில் ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தினத்தந்தி 26 Feb 2024 10:29 AM GMT (Updated: 26 Feb 2024 10:36 AM GMT)

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் நடை பயண நிறைவு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை பல்லடம் அருகே நடைபெறுகிறது.

திருப்பூர்,

பாதயாத்திரை நிறைவு விழாவை பாராளுமன்றத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டமாக நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக சுமார் 1300 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பொதுக் கூட்ட மைதானத்தை மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் அவர்களது தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்களது அறிவுறுத்தல் படி, இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களும், திருப்பூர் மாவட்ட எல்லையில் ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை பின்பற்றி ட்ரோன்களை கண்காணிக்கும் படி போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . இந்த பொதுக்கூட்ட பாதுகாப்பு பணிகளில் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 7ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story