பருத்தியை குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் விவசாயிகள் சாலை மறியல்


பருத்தியை குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

குத்தாலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பருத்தி சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கரில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் பருத்தி 100 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோவில் ஆகிய 4 இடங்களில் வேளாண் விற்பனைக்குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் பருத்தியை வாங்கிச் செல்கின்றனர். குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் 1400 விவசாயிகள் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்பதற்காக தங்கள் பருத்தியை எடுத்து வந்திருந்தனர்.

சாலை மறியல்

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7080-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5800-க்கும் வியாபாரிகளால் ஏலம் கேட்கப்பட்டது. இதற்கு ஆட்சேபனம் தெரிவித்து விவசாயிகள் கடந்த ஆண்டு பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மோசடியில் ஈடுபடுவதாகவும், உரம் விலை, ஆட்கள் கூலி, வண்டி வாடகை செலவு ஆகியவைகள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நஷ்டமாகும் விலையை தனியார் வியாபாரிகள் கேட்பதாக கூறி, ஏலத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.

தொடர்ந்து மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் இரவு 7 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரண்டாவது முறையாக இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் வியாபாரிகளை அழைத்து பேசுவதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story