விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலி - தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர் ஆர்.என்.ரவி


விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலி -  தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 17 May 2023 2:19 PM GMT (Updated: 17 May 2023 2:20 PM GMT)

தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி இரவு விஷச்சாராயம் விற்கப்பட்டுளது. இதை வாங்கி குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை கிராமத்தில் கடந்த சனிக்கிழமை விஷச்சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்தனர்.

இதனால், விழுப்புரம், செங்கல்பட்டில் விஷச்சாராயம் குடித்து மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாராய வியாபாரிகள் உள்பட பலரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளார்.


Next Story