வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பலி


வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பலி
x

வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார்.

அரியலூர்

தா.பழூர்:

மூதாட்டி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மாள்(வயது 80). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது சின்னம்மாள் உதயநத்தம் கிராமத்தில் சாலை தெருவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

அவரது மகள்கள் அதே ஊரில் வெவ்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் படுக்கையிலேயே சின்னம்மாள் இருந்ததாக கூறப்படுகிறது.

வீடு தீப்பற்றி எரிந்தது

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் வீட்டில் சின்னம்மாள் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கூரை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம், பக்கத்தில் வீடுகள் இல்லாததால் வீடு தீப்பற்றி எரிந்தது பற்றி உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. அந்த வழியாக வந்தவர்கள், வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த சின்னம்மாளின் மகள்கள், அங்கு விரைந்து வந்து கதறி அழுதனர். மேலும் வீட்டிற்குள் சின்னம்மாள் சிக்கி இருப்பது பற்றி கூறி அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

உடல்கருகி சாவு

மேலும் வீடு முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. ஜெயங்கொண்டத்தில் இருந்து தீயணைப்பு மீட்பு படையினர் நிலைய அதிகாரி மோகன்ராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க கடுமையாக போராடினர்.

தீயை அணைப்பதற்குள் சின்னம்மாள் தங்கியிருந்த குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தீ அணைக்கப்பட்ட பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கட்டிலில் உடல் கருகிய நிலையில் சின்னம்மாள் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

காரணம் என்ன?

இதுகுறித்து தா.பழூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், சின்னம்மாளின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைத்தார்களா? என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story