தெய்வச்செயல்புரம்விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா


தெய்வச்செயல்புரம்விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:47 PM GMT)

தெய்வச்செயல்புரம்விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் உள்ள விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

விசுவரூப ஆஞ்சநேயர்

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் தெய்வச்செயல்புரத்தில் விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 77 அடி உயர விசுவரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தனிச்சிறப்பு உண்டு. இலங்கையில் சீதையை ராவணனின் பிடியில் இருந்து மீட்பதற்காக படையெடுத்து சென்றார். அங்கு நடந்த போரின் போது, லட்சுமணன் மூர்ச்சையாகினார். இதனால் அவரை உயிர்ப்பிக்க வீர ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தார். அவர் மலையை தூக்கி வந்த போது, மலையில் இருந்த சிறு சிறு கற்கள் 6 இடங்களில் விழுந்தன. அந்த இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் விசுவரூப தரிசனத்தில் காட்சி அளித்து வருவதாகவும், இந்த கற்கள் விழுந்த இடங்கள் சிறிய மலைக்குன்றாக காட்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

6 கோவில்கள்

அதன்படி நாமக்கல், சுசீந்திரம் தாணுமலை, சென்னை பரங்கிமலை, திண்டுக்கல் சின்னாளம்பட்டி, தூத்துக்குடி தெய்வச்செயல்புரம், இலங்கை ஆகிய இடங்களில் இந்த 6 கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களில் மட்டுமே ஆஞ்சநேயர் விசுவரூபத்தில் காட்சி அளிக்கிறார். இந்த 6 இடங்களிலும் ஆஞ்சநேயர் மலையை நோக்கி நிற்பது போன்று சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நவகைலாயம், நவதிருப்பதி போன்று இந்த 6 ஆஞ்சநேயர் கோவில்களும் அமைந்து உள்ளன.

6 கோவில்களிலும், தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் அமைந்து உள்ள 77 அடி உயர ஆஞ்சநேயர் உயரமானவர் ஆவார். இவர் வல்லநாடு மலையை நோக்கி காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமண தடை நீங்கும், கல்வி அபிவிருத்தி, செல்வம் பெருகும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனுமன்ஜெயந்தி

இங்கு நேற்று அனுமன்ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனை, மதியம் 11 மணிக்கு மேல் அன்னதானம் நடந்தது. விசுவரூப ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வடைமாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு, கனி அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு வடை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகி ராஜேசுவரி, பொருளாளர் சண்முகசுந்தரம், அர்ச்சகர் சீனிவாசபட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வைகுண்டபதி பெருமாள் கோவில்

இதே போன்று தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் உள்ள அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story