தமிழகத்தில் பனைப்பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை: வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்


தமிழகத்தில்  பனைப்பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை:  வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

தமிழகத்தில் பனைப்பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கிள்ளிகுளம்:

தமிழகத்தில் பனைப்பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண்டல ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சமூக நலன் மற்றும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், துணைவேந்தர் கீதாலட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் இயக்குனர் பிருந்தாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வேளாண்மை துறை சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வேளாண்மை சார்ந்த பொருட்களை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

5 மாவட்ட விவசாயிகள்

இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கனிெமாழி எம்.பி. பேசியதாவது:-

விவசாயம் தான் நாட்டின் ஆணிவேர். கொரோனா காலகட்டத்தில் மூடப்படாத ஒரே துறை விவசாயத்துறை தான். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகளின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளை தயார்படுத்த வேண்டும். விவசாய ஆராய்ச்சியில் புதிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு முன்னோடியாக இருக்கிறோம். அது வெளியில் தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் விவசாயம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ளது. வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பனைப்பொருட்கள்

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பனைப்பொருளை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றும் பணியில் வேளாண்மை துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி மையத்தில் புதிய டிப்ளமோ கல்லூரி தொடங்குவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் வேளாண் துறை மூலமாக புதிய தொழில் வளத்தை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story