ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் மாணவர்களுக்கு விலக்கு தேவை


ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் மாணவர்களுக்கு விலக்கு தேவை
x

‘ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் மாணவர்களுக்கு விலக்கு தேவை', என்று தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்-லைன் விண்ணப்பத்தில், 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 2021-ம் ஆண்டில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயம் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

தேர்வுகள் நடத்தப்படாததால் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், 2020-21-ம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் மதிப்பெண்கள் இல்லாததால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் 30 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசின் தேர்வுத்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

விலக்கு அளிக்க வேண்டும்

கூட்டு நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை சில தளர்வுகளை அளித்தால் தவிர, இந்த சிக்கலுக்கு தீர்வு இல்லை. கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ந்தேதி கடைசி நாளாகும்.

அதற்குள்ளாக தமிழக அரசு தேர்வுத் துறையால், 2020-21-ம் ஆண்டில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை ஆய்வு செய்து, அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது சாத்தியமே இல்லை. அவ்வாறு வழங்கினாலும் அதை தேசிய தேர்வு முகமை ஏற்குமா? என்பது கேள்விகுறிதான்.

ஆன்-லைன் விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தான் ஒரே தீர்வு ஆகும். அதற்கான இடங்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை தேசிய தேர்வு முகமை அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story