மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் அ.தி.மு.க. பிரமுகர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு


மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் அ.தி.மு.க. பிரமுகர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
x

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் அ.தி.மு.க. பிரமுகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). தொழிலதிபரான இவருக்கும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதிக்குட்பட்ட அய்யம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான அன்புநாதன் (55) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கொடுக்கல்- வாங்கல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அன்புநாதன் பிரகாஷிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு மீண்டும் பிரகாஷை தொடர்பு கொண்ட அன்புநாதன் தனது பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி மீண்டும் ரூ.2 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அன்புநாதன் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக பிரகாஷை சேர்த்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரகாஷ், அன்பு நாதனை சந்தித்து தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அன்புநாதன், பிரகாஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் வழக்குப்பதிவு செய்து பணம் மோசடி செய்த அன்புநாதனை கைது செய்தார். பின்னர் அவரை ஜே.எம்.-2 நீதிபதி சுஜாதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறியதையடுத்து போலீசார் மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதனைதொடர்ந்து நீதிபதியின் உத்தரவின் பேரில் அன்புநாதன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story