'கூட்டணி குறித்து பொறுமையாக முடிவெடுப்போம்' - ச.ம.க. தலைவர் சரத்குமார்


கூட்டணி குறித்து பொறுமையாக முடிவெடுப்போம் - ச.ம.க. தலைவர் சரத்குமார்
x

கூட்டணி குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒற்றைக் கருத்து ஏற்படவில்லை என சரத்குமார் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் கும்பகோணத்தில் இன்று சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர்மட்ட குழுவினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அவற்றை பரிசீலனை செய்து இறுதி முடிவெடுக்க வேண்டும். ஒற்றைக் கருத்து இருந்தால் விரைவாக முடிவு எடுக்கலாம். ஆனால் தற்போது ஒற்றைக் கருத்து ஏற்படவில்லை.

சமத்துவ மக்கள் கட்சி 16 ஆண்டுகளைக் கடந்து 17-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாங்கள் எடுக்கும் முடிவு வெற்றி பெறக்கூடியதாக இருக்க வேண்டும். தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம்தான் வர இருக்கிறது. எனவே கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Next Story