அகஸ்தியர் அருவியில் பராமரிப்பு பணிகள் தீவிரம்


அகஸ்தியர் அருவியில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
x

பாநாசம் அகஸ்தியர் அருவியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். 2023-ம் ஆண்டுக்கான வன உயிரின கணக்கெடுப்பு பணியின் காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் உள்பட பாபநாசம் வனப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

தற்போது அகஸ்தியர் அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு இடையே உள்ள தடுப்புச்சுவர், தடாகப்பகுதி, அருவியை சுற்றி தடுப்பு கம்பிகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்த பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த பணிகளுடன் அருவிக்கு ெசல்லும் சாலை மோசமாக இருப்பதால் அதை சரிசெய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த சாலை பராமரிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story