ஐகோர்ட் அனுப்பிய சுற்றறிக்கையில் உள்நோக்கம்: அம்பேத்கர் படத்தை அகற்ற திட்டம்- திருமாவளவன் ஆவேசம்


ஐகோர்ட் அனுப்பிய சுற்றறிக்கையில் உள்நோக்கம்: அம்பேத்கர் படத்தை அகற்ற திட்டம்- திருமாவளவன் ஆவேசம்
x
தினத்தந்தி 23 July 2023 8:21 AM GMT (Updated: 23 July 2023 8:28 AM GMT)

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஐகோர்ட் அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது உள்நோக்கம் கொண்ட சுற்றறிக்கை என்று விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "உயர்நிதிமன்ற பதிவாளர் அண்மையில் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. திருவள்ளுவர் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே நீதிமன்ற வளாகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும் என ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்கள்.

இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்கரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையாக இருக்கிறது. இந்த சுற்றறிக்கையை உயர்நீதிமன்றம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.


Next Story