பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
![பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2022/05/28/711689-c7.webp)
ஸ்ரீமுஷ்ணம் அருகே பொதுத்தேர்வை சரியாக எழுதாததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பெரியாத்துகுறிச்சி கல்கேனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய மகள் நந்தினி (வயது 16). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூரில் தனது தாத்தா வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
தற்போது நடக்கும் அரசு பொதுத்தேர்வை எழுதி வந்தார். ஆனால் அவர் தேர்வை சரியாக எழுதவில்லை என்று மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று வீட்டில் தனியாக இருந்த நந்தினி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்ததும் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த நந்தினி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி அவரது தந்தை இளையராஜா ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு தேர்வை சரியாக எழுதாததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.