பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை
![பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை](https://media.dailythanthi.com/h-upload/2022/05/30/714624-pop-5.webp)
பா.ஜனதா நிர்வாகியை தாக்கிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகி வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
பா.ஜனதா நிர்வாகியை தாக்கிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகி வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் போலீசார் சோதனை
நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் நிர்வாகியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் இரணியலை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி ராதாகிருஷ்ணனை தாக்கிய வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் நேற்று இடலாக்குடியில் உள்ள சாகுல் அமீதின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சிலர் வீட்டின் முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆவணங்கள் சிக்கின
இதுதொடர்பாக குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமனிடம் கேட்டபோது கூறியதாவது:-
பா.ஜனதா நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் சாகுல் ஹமீதை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் அவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. எனவே எனது தலைமையில் போலீசார் சாகுல் ஹமீது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சாகுல் ஹமீதிடம் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.