வாட்ஸ்அப் குழுவில் கருத்துகளை பதிவிடுவது விதிமீறல் ஆகாது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


வாட்ஸ்அப் குழுவில் கருத்துகளை பதிவிடுவது விதிமீறல் ஆகாது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x

வாட்ஸ்அப் குழுவில் கருத்துகளை பதிவிடுவது விதிமீறல் ஆகாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மதுரை


தமிழ்நாடு கிராம வங்கியில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கிளையில் பணியாற்றி வருபவர் லெட்சுமிநாராயணன். இவர், வங்கி நிர்வாகம் மற்றும் நிர்வாக முடிவை விமர்சித்து வாட்ஸ் அப்பில் பதிவு செய்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவை பெற்றார். இதுகுறித்து அவருக்கு மெமோ வழங்கப்பட்டது. அதை ரத்து செய்யக்கோரி லெட்சுமி நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தகவல் தொடர்பில் வாட்ஸ் அப் என்பது முக்கியமானது. மனுதாரர் தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் வங்கி நிர்வாகம் தொடர்பாக சில கருத்துகளை பதிவிட்டு உள்ளார். அதை அவர் ஒப்புக்கொண்டார். மன்னிப்பும் கோரியுள்ளார். தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் கருத்துக்களை பதிவிடுவது என்பது வங்கி நிர்வாகத்தின் நடத்தை விதிகளை மீறியதாக ஆகாது.

எந்தப் பணியாளராக இருந்தாலும் அவர் தனது நடத்தை மூலம் உயர் அதிகாரிகளை மதிக்க வேண்டும். பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் இருக்கும்போது அந்த அதிகாரி விமர்சனத்திற்குள் சிக்கலாம். அவ்வாறு நடக்கும் போது அதனை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.

பணியாளர்கள் வெளியே பேசுவதை தடுக்க முடியாது. பணியாளர்கள் தங்கள் வீடுகளில் தனிப்பட்ட முறையில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பது நிர்வாக கட்டுப்பாடுகளை மீறியதாக வராது. தற்போதைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் தனது கருத்தை தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுவில்தான் பகிர்ந்து உள்ளார். இதனால் வங்கியின் நலன் பாதிக்கப்பட்டது என்ற முடிவுக்கு நிர்வாகத்தினர் எப்படி வந்தார்கள்? என்று தெரியவில்லை. எனவே மனுதாரருக்கு வழங்கிய மெமோ ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story