தூத்துக்குடியில் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி முணையம் அமைக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை


தூத்துக்குடியில் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி முணையம் அமைக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
x

தூத்துக்குடியில் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி முணையம் அமைக்க மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

விவசாய விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியில் ஏற்றுமதி முனையத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்று விவசாய சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அய்யப்ப ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பி.ஆர்.பாண்டியன்

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் மாநில ஒருங்கிணைப் பாளர் பி. ஆர். பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:

தென்மேற்கு பருவ மழை பெய்தும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பவில்லை. எனவே, இந்த மாவட்டங்களில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி, தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய விளை பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியில் மத்திய அரசு ஏற்றுமதி முணையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான பல மறைமுக சதி நடைபெறுவதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதனை நிரந்தரமாக மூடவேண்டும்.

கேரளாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் முல்லை பெரியாறு தவிர்த்து மற்ற நதிநீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய நீர்பாசன திட்டங்களை செயல்படுத்தவும் முதல்-அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாமிரபரணி தண்ணீர்...

கேரளாவில் நதியில் இருந்து வெளியேறும் நீர் அரபிக் கடலில் கலக்கிறது. ஆனால், தமிழ்நாட்டை நோக்கி வரும் ஆறுகளை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணியின் தண்ணீர் கடலில் கலப்பதை தடுத்து, அந்த தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலைதான் நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் இருக்கிறது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ததை வரவேற்கிறோம். தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் விலை தருவதாக அறிவித்தபடி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story