இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்


இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:47 PM GMT)

நடுவீரப்பட்டு அருகே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

நடுவீரப்பட்டு,

நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை சிலர் சிமெண்டு கட்டைகள் வைத்து மூடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சென்று சிமெண்டு கட்டைகளை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் சிமெண்டு தடுப்பு கட்டைகள் அகற்றப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சி.என்.பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிமெண்டு கட்டைகளை அகற்றக்கோரியும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் நடுவீரப்பட்டு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும். அங்கு உங்கள் கோரிக்கைகளை தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்றனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story