முளைக்கீரை அறுவடை பணிகள் தீவிரம்


முளைக்கீரை அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:47 PM GMT)

பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் முளைக்கீரை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கீரைகள் அதிக அளவு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் முளைக்கீரை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கீரைகள் அதிக அளவு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முளைக்கீரை சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல், பருத்தி, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்களும், புடலங்காய், பாகற்காய் பீர்க்கங்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரிகாய், முள்ளங்கி, முளைக்கீரை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த பருவத்தில் பொறையாறு அருகே காழியப்பநல்லூர், அனந்தமங்கலம், பத்துகட்டு, பரசலூர், மேலபாதி, கஞ்சாநகரம், கிடாரங்கொண்டான், கீழையூர், காளகஸ்திநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முளைக்கீரை சாகுபடி செய்து வருகின்றனர்.

அறுவடை

தற்போது பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள் முளைக்கீரை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஜான் கூறுகையில், கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பு தற்போது முளைக் கீரை அறுவடை செய்து வருகிறோம்.

நிலத்தடி நீர் மூலம் மோட்டாரை பயன்படுத்தி முளைக்கீரைக்கு தண்ணீர் தெளித்து வளர்த்து வருகிறோம். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. காலை, மாலை 2 முறை தண்ணீர் தெளிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

உடல் உஷ்ணம் குறையும்

அறுவடைக்கு தயாராக உள்ள முளைக்கீரையை மொத்தமாகவும் சில்லரையாகவும் அறுவடை செய்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம். வெயில் காலத்தில் முளைக்கீரையை உட்கொண்டால் உடல் உஷ்ணம் குறையும். குழந்தைகளுக்கு முளைக்கீரையை கொடுத்தல் ஜீரனத்தன்மை அதிகரிக்கும்.இதனால் பொதுமக்கள் அதிக அளவில் முளைக்கீரையை வாங்கி செல்கின்றனர். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story