ஓசூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை: ஏரிகள் நிரம்பி குடியிருப்புகள், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது-பொதுமக்கள் அவதி


ஓசூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏரிகள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. குறிப்பாக, ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது.

இந்த மழையால் ஓசூர் பஸ் நிலையம் வெள்ளக்காடானது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால், அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வெள்ளக்காடாக மாறின

இதேபோல், ஓசூர் அருகே சின்ன எலசகிரி, பேகேப்பள்ளி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளும் கனமழையால் வெள்ளக்காடாக மாறின. ஓசூர் சமத்துவபுரம் அருகே தனியார் குடியிருப்பு பகுதிகளிலும், சமத்துவபுரம் எதிரில் உள்ள அனுமந்தபுரத்திலும் குடியிருப்புகளின் உள்ளே மழைநீர் புகுந்தது.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அவர்களை ஓசூர் சமத்துவபுரத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

ரசாயன கழிவுகள் கலந்து துர்நாற்றம்

ஓசூர் பகுதியில் கனமழை பெய்ததில், ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஏரியும் நிரம்பியது. இந்தநிலையில், ஏரி நீரில் அருகேயுள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.

மிகவும் துர்நாற்றத்துடன் இந்த தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

மினிவேன் நொறுங்கியது

கனமழை காரணமாக ஓசூர் பழைய அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. இதில் சுற்றுச்சுவர் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிவேன் ஒன்று இடிபாடுகளில் சிக்கி அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியது. இதனை மீட்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஓசூர் அருகே பாகலூர் கிராமத்தில் நேற்று காலை பெய்த கனமழையால் பாகலூர் ஏரி நிரம்பி, அதில் இருந்து வெளியேறிய உபரிநீர் தனியார் லேஅவுட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்தோடியது. இதனால் இப்பகுதி மக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.

காரப்பட்டு ஏரி

ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சியில் மெயின்ரோட்டை ஒட்டியவாறு ஆலேரி ஏரி உள்ளது. இந்த ஏரிச்சாலை வழியே மண்குன்றுமலை, நல்லாகவுண்டனூர், பெரியார் நகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கனமழையால் இந்த ஏரி நிரம்பி சாலைகளின் வழியாக பாய்ந்தோடியது. மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் ஏரி நீர் புகுந்தது. ஏரி நீரோடு கழிவுநீரும் கலந்துள்ளதால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. அஞ்செட்டியில் மட்டும் 64 மில்லி மீட்டரும் தேன்கனிக்கோட்டையில் 31 மில்லி மீட்டரும் தளியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

அஞ்செட்டி அடுத்த மாவனட்டி கிராமத்தில் மழைநீருடன் கழிவு நீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய சாக்கடை கால்வாயில் மக்கள் ஆனந்த குளியல் போட்டனர்.

தளி பெரிய ஏரி நிரம்பி சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அடவிசாமிபுரம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை பெரிய ஏரி, கெம்பத்பள்ளி ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பின.

விடுமுறை

நேற்று காலையிலும் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். கனமழையால் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நேற்று மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி விடுமுறை அறிவித்தார்.


Next Story