திருட்டுப்போன ரூ.13 லட்சம் செல்போன்கள் மீட்பு


திருட்டுப்போன ரூ.13 லட்சம் செல்போன்கள் மீட்பு
x

தஞ்சையில், திருட்டுப்போன ரூ.13 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில், திருட்டுப்போன ரூ.13 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

செல்போன்கள் திருட்டு

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக பஸ் நிலையம், சுற்றுலா தலங்களிலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெரிய கோவில், ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி சாலை, புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட தஞ்சை மேற்கு போலீஸ் நிலையம் மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன மற்றும், திருட்டுப்போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு ஏராளமானோர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம், போலீஸ் ஏட்டுகள் செல்வகுமார், சிலம்பரசன் மற்றும் போலீசார் காணாமல் போன மற்றும் திருட்டுப் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருட்டுபோன மற்றும் மாயமான செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் நடைபெற்ற ேதடுதல் வேட்டையில் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.

அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்களை தஞ்சை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு சென்று செல்போன்களை போலீசார் மீட்டனர்.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

மேலும் சந்தேகப்படும் படி யாராவது செல்போனை விற்க வந்தால் அவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கடை உரிமையாளர்களை அறிவுறுத்தினர். மேலும் சில செல்போன்களை ் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிலர் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.

அந்த செல்போன்களை அவர்கள் செல்போன்கடைகளில் விலைக்கு வாங்கியது தெரியவந்தது. மேலும் சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்களை தஞ்சை மேற்கு போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

ரூ.13 லட்சம் மதிப்பு

அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் கவனமாக செல்போன் மட்டுமின்றி உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் பயன்படுத்திய பழைய செல்போன்களை தெரிந்தவர்கள் இல்லாமல் வேறு யாரிடமும் வாங்காதீர்கள் என்று அறிவுறுத்தினார்.

இதைப்போல தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 20-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மொத்தம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story