தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்: அமைச்சர் அறிவிப்பு


தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்: அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2022 7:19 AM GMT (Updated: 14 Nov 2022 7:20 AM GMT)

வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் என விதி உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர் மழை காரணமாக ஒருசில பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்றும், முதல் அமைச்சர் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் என ஏற்கெனவே விதி உள்ளது. இதேபோல், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவராணம் வழங்கவும் விதி உள்ளது.

மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால், ரூ.95 ஆயிரம் நிவாரணம், மழை காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் , ஆடு, பன்றி உயிரிழந்தால் 3 ஆயிரம் நிவாரணம் வழங்க விதி உள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story