தூய்மை பணியாளர் அடித்துக்கொலை


தூய்மை பணியாளர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2022 7:00 PM GMT (Updated: 24 Nov 2022 7:00 PM GMT)

கொடைக்கானலில் சொத்து தகராறில், தூய்மை பணியாளரை அடித்துக்கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

தூய்மை பணியாளர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காமராஜர் சாலை பகுதியில் வசித்து வந்தவர் நடராஜ் (வயது 50). இவர், கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், தினேஷ் (27) என்ற மகனும் உள்ளனர்.

கூலித்தொழிலாளியாக வேலை செய்து வரும் தினேசுக்கு திருமணமாகி, தனது பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். தினேசுக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தினேஷ், தனது தந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

சரமாரி தாக்குதல்

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி தினேஷ், தனது தந்தை நடராஜிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ், தந்தை என்று கூட பாராமல் நடராஜை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து நடராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து நடராஜ் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நடராஜ் இறந்தார்.

மகன் கைது

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்தனர். சொத்து தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story