வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கான உதவித்தொகை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்


வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கான உதவித்தொகை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட வயது முதிர்ந்த 4 தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட வயது முதிர்ந்த 4 தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 339 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை

கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட வயது முதிர்ந்த 4 தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், கொத்தடிமைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு, நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு, முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.


Next Story