செங்கிப்பட்டி மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது


செங்கிப்பட்டி மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது
x

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. உரிய பராமரிப்பு இல்லாததால் பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததாக கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. உரிய பராமரிப்பு இல்லாததால் பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததாக கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கிப்பட்டி மேம்பாலம்

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாகத்தான் தஞ்சை-திருச்சி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகிறது.

பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது

இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது ஆள்நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பொது மக்கள் தஞ்சை-திருச்சி சாலையில் திரண்டனர். உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததாக கூறி தஞ்சை-திருச்சி சாலையில் திரண்ட விவசாய சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடித்ததால் திருச்சி, கந்தர்வக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கிப்பட்டி பிரிவு சாலை வழியாக சென்றது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தரமற்ற பாலத்தை கட்டி சரிவர பராமரிக்கப்படாததே பாலத்தின் சுவர் இடிந்து விழுவதற்கு காரணம் என கூறி கோஷமிட்டனர். மேலும் பாலத்தை புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் செங்கிப்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் கணேஷ்குமார் தலைமையில் என்ஜினீயர்கள் குழுவினர் மற்றும் திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர்கள் பாஸ்கரன், முத்துக்குமரன் ஆகியோரும் இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

போக்குவரத்துக்கு தடை

பின்னர் அவர்கள் கூறும்போது, சேதம் அடைந்த பாலத்தின் மேல் வாகனங்கள் சென்று வந்தால் அதிர்வு காரணமாக பாலம் மேலும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்கும் வரையில் சேதம் அடைந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்.

இதேபோன்று சர்வீஸ் ரோட்டிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அந்த ரோட்டிலும் வாகனங்களை இயக்காமல் தடை செய்ய வேண்டும் என்றனர்.

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story