குழந்தைக்கு நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை ...! மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்


குழந்தைக்கு நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை ...! மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:16 PM GMT (Updated: 24 Nov 2022 7:15 AM GMT)

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து டீன் விளக்கம் அளித்தார்.

மதுரை


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து டீன் விளக்கம் அளித்தார்.

கொத்தனார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கே.கே.நகர் காலனியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 23). கொத்தனார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவின் என்ற குழந்தை உள்ளது. இந்தநிலையில், கடந்த வருடம், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கவினுக்கு நாக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறு பரிசோதனைக்காக அவர்கள் கடந்த 21-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் குழந்தையை கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைக்கு நேற்று முன்தினம் காலை மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை நாக்கில் செய்வதற்கு பதிலாக சிறுநீரக பகுதியில் செய்து விட்டதாக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இதுகுறித்து குழந்தையின் தந்தை அஜித்குமார், மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், என்னுடைய மகனுக்கு நாக்குப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்து விட்டனர். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, மீண்டும் என் மகனை அழைத்து சென்று நாக்குப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்தனர். எனவே, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

டீன் விளக்கம்

இதுகுறித்து, அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் கூறியதாவது:-

குழந்தை கவினுக்கு வாய்க்குள் நாக்கு ஒட்டிக்கொண்ட பிரச்சினை இருந்தது. இதனால், அந்த குழந்தைக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அறுவை சிகிச்சைக்காக 2 தினங்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அப்போது குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது, குழந்தை சிறுநீர்ப்பை விரிவடைந்து இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், குழந்தையின் சிறுநீரக பகுதியில் முன்தோல் குறுக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால், மற்றொரு மயக்க மருந்தைத் தவிர்ப்பதற்காக ஒரே அமர்வில் விருத்தசேதனம் மற்றும் நாக்கு ஒட்டுதல் ஆகியவற்றிற்காக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை நன்றாக இருக்கிறது. உணவு சாப்பிடுகிறது. சிறுநீர் கழிக்கிறது. குழந்தையின் உடல் நலம் சீராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரி கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது குழந்தைக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும், சிறுநீரக பகுதியில் அடைப்பு இருந்ததால் சிறுநீர் அதிக அளவில் இருந்தது உறுதியானது. அவ்வாறு இருக்கும்போது, மீண்டும் மயக்கமருந்து கொடுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், சிறுநீரை வெளியேற்ற முயற்சி செய்தபோது, முன்பகுதியில் தோல்ஒட்டிய நிலையில் இருந்தது. அதனை இப்போது சரி செய்யாவிட்டாலும் பிற்காலத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதன் காரணமாக, ஒரே சமயத்தில் 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது என்றார்.


Next Story