அயோத்தியாப்பட்டணம் அருகே தீயில் கருகி மூதாட்டி சாவு
![அயோத்தியாப்பட்டணம் அருகே தீயில் கருகி மூதாட்டி சாவு அயோத்தியாப்பட்டணம் அருகே தீயில் கருகி மூதாட்டி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/11/22/996873-death-2.webp)
அயோத்தியாப்பட்டணம் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்தார்.
அயோத்தியாபட்டணம்,
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 85). இவர் வயது முதிர்வின் காரணமாக சரியாக நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.கடந்த 19-ந் தேதி மாலை 6 மணி அளவில், அதே பகுதியில் வசிக்கும் மகன் காட்டுராஜாவின் வீட்டின் தாழ்வாரத்தில் கயிற்று கட்டிலில் முனியம்மாள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கொசு தொல்லை காரணமாக, மூதாட்டி தூங்கிக்கொண்டிருந்த கட்டில் அருகில், மகன் காட்டு ராஜா கொசுவர்த்தி பற்ற வைத்து விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் வந்து பார்த்தபோது, வீட்டின் தாழ்வாரத்தில் கட்டிலுடன் சேர்ந்து மூதாட்டியின் உடலிலும் தீப்பற்றி எரிய தொடங்கி இருந்தது.
உடனே காட்டுராஜா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முனியம்மாள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தார். மேலும் உயிருக்கு போராடிய அவரை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.