பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்துரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை


பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்துரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

பாவூர்சத்திரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றபோது, மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றபோது, மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி ஆசிரியை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஹாஸ்பல் நகரில் குடியிருந்து வருபவர் நேசமணி (வயது 59). எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவரது மனைவி உஷா பாப்பா (58). இவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பிரார்த்தனைக்காக நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் வீட்ைட பூட்டிவிட்டு சென்றனர்.

பூட்டு உடைப்பு

பின்னர் நேசமணி மட்டும் வீட்டிற்கு சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்புற கேட்டில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது.

இதுகுறித்து உடனடியாக அவர், பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி, சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

20 பவுன் கொள்ளை

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அறைகளில் உள்ள அனைத்து பீரோக்கள், கட்டில்கள் உடைக்கப்பட்டு இருந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கைேரகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அதுமோப்பம் பிடித்து வீட்டின் முன் பகுதி, வடபுறம் உள்ள காட்டுப்பகுதியில் ஓடியது. பின்னர் தென்காசி-நெல்லை சாலையில் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது.

ரூ.6 லட்சம் நகைகள்

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், நேசமணி தனது குடும்பத்துடன் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் வீட்டின் முன் கேட்டின் உள்ள பூட்டை உடைத்தாலும், மெயின் கதவை உடைக்கமுடியவில்லை. இதனால் மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் வழியாக சென்று கதவின் மேல் பகுதியில் இருந்த சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். பாவூர்சத்திரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Next Story