மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதல் தாய்-மகன் சாவு


மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதல்   தாய்-மகன் சாவு
x

உத்தமபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி தாய், மகன் பரிதாபமாக இறந்தனர்.

தேனி

சுற்றுலா வேன் மோதல்

தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த மாரியப்பன் மனைவி செல்வி (வயது 42). இவரது மகன் விக்னேஷ் (23). இவர்கள் இருவரும் கேரள மாநிலத்துக்கு கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

நேற்று செல்வியும், விக்னேசும் கூடலூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பைக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவில் மோட்டார்சைக்கிளில் கூடலூருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

வழியில் உத்தமபாளையம்-அனுமந்தன்பட்டி புதிய பைபாஸ் சாலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது எதிரே வந்த சுற்றுலாவேன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

தாய்-மகன் சாவு

இதில் தாயும், மகனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, இன்ஸ்பெக்டர் சிலை மணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். செல்வி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவரும் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையம்-அனுமந்தன்பட்டி புதிய பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. எனவே தொடர்விபத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story