சிவகாசி அருகே துயர சம்பவம்: பட்டாசு விபத்தில் 14 பேர் பலி -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


சிவகாசி அருகே துயர சம்பவம்: பட்டாசு விபத்தில் 14 பேர் பலி -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வாங்கிய புதிய வெடியை வெடித்து பார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பலியானார்கள். இந்த துயர சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகாசி,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது.

சிவகாசி கங்காகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சுந்தரமூர்த்தி (வயது 43). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ரெங்கப்பாளையம் கிராமத்தில் இயங்கி வருகிறது.

இந்த பட்டாசு ஆலையையொட்டி சுந்தரமூர்த்தி என்பவரின் பட்டாசு கடையும், பட்டாசு சேமிப்பு கிடங்கும் இயங்கி வந்தன. அந்த கடைக்கு பின்புறமாக அமைத்து இருந்த 3 அறைகளில் கடைக்கு விற்பனைக்காக பட்டாசு 'கிப்ட் பாக்ஸ்'களை தயார் செய்யும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணியில் 3 அறைகளிலும் நேற்று மதியம் பெண்கள் மும்முரமாக இருந்தனர்.

உடல் கருகி பலி

அந்த நேரத்தில் வெளிப்புறமாக இருந்த கடைக்கு பட்டாசுகள் வாங்க வெளியூரில் இருந்து சிலர் வந்திருந்தனர். அவர்கள் புதிய வகை பட்டாசுகளை தேர்வு செய்தனர்.

அதில் சில பட்டாசுகளை எடுத்து கடையின் வெளியே வைத்து வெடித்து விபரீத செயலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. அப்போது, அதில் ஒரு பட்டாசு வெடித்து கடைக்குள் விழுந்ததாகவும், உடனே கடையில் இருந்த பட்டாசுகளில் தீப்பொறி பட்டு வெடித்துச்சிதற தொடங்கியதாகவும் தெரியவருகிறது.

கடையின் பின்புறம் அமர்ந்து பட்டாசு கிப்ட் பாக்ஸ் செய்துகொண்டிருந்த பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரிவதற்குள், அங்கும் பட்டாசுகள் வெடித்துச்சிதறி புகை மண்டலமாக மாறியது. தொடர்ந்து பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் சிதறிய வண்ணமாக இருந்ததால் யாராலும் அருகில் நெருங்க முடியவில்லை. கடையின் உள்ளே இருந்தும் பெண்களால் வெளியே வர முடியாமல் அவர்கள் அலறினர். சற்று நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக உடல்கருகி பலியான கொடுமை அரங்கேறியது.

ஒரு மணி நேர போராட்டம்

இதற்கிடையே வெடிவிபத்து பற்றி அறிந்ததும் எம்.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சிவகாசி தீயணைப்பு படை வாகனங்கள் சற்று நேரத்தில் வந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு கண்ட காட்சி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. பலியானவர்கள் உடல்கள் ஆங்காங்கே கருகி கிடந்தன. அவற்றை மீட்டு உடனடியாக பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெண்கள் உள்பட மொத்தம் 13 பேரின் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அவற்றை அடையாளம் காண்பதற்காக அந்த பட்டாசு கடைக்கு பணிக்கு வந்தவர்கள், கிப்ட் பாக்ஸ் செய்யும் பணிக்கு வந்த பெண்கள் யார்-யார்? என்ற விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பலியானவர்கள் விவரம்

அதன்பின்னர், பலியான 13 பேரின் பெயர்கள் விவரமும் தெரியவந்தது. அது வருமாறு:-

1. வடக்கு அழகாபுரி இந்திராநகரை சேர்ந்த ஸ்ரீசீனிராஜ் என்பவருடைய மனைவி மகாதேவி (வயது50)

2. வடக்கு அழகாபுரி நாகராஜ் மனைவி பஞ்சவர்ணம் (35)

3. இதே பகுதியை சேர்ந்த தாளமுத்து மனைவி தமிழ்ச்செல்வி (55)

4. மூவரை வென்றானைச் சேர்ந்த குருக்கலாஞ்சி மனைவி முத்துலட்சுமி (36).

5. எஸ்.அம்மாபட்டியைச் சேர்ந்த முனீசுவரி (32)

6. அழகாபுரி மகேந்திரன் மகள் தங்கமலை.

7. காந்தி நகர் முனியப்பன் மனைவி அனிதா (40).

8. லட்சுமியாபுரம் ஜெயமுருகன் மனைவி பாக்கியலட்சுமி (35).

9. இதே பகுதியை சேர்ந்த சுப்புக்கனி மனைவி குருவம்மாள் (55)

10. அம்மாபட்டி காளிராஜன் மனைவி லட்சுமி (28).

11. லட்சுமியாபுரத்தை சேர்ந்த முருகானந்தம் மனைவி இந்திரா (50).

12. மூவரை வென்றான் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மனைவி செல்லம்மாள் (40)

13.வடக்கு அழகாபுரி முத்து ராஜ் மகன் பாலமுருகன் (30)

2 பேர் படுகாயம்

இந்த சம்பவத்தில் சங்கர் என்பவருடைய மனைவி சின்னத்தாய் (35), ஆறுமுகம் மனைவி பொன்னுத்தாய் (45) ஆகியோர் தீக்காயத்துடன் உயிர் தப்பினர்.

வெடி விபத்து நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்த வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு வெடிவிபத்தில் தொழிலாளி பலி

சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்தவர் முத்துவிஜயன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உள்ள ஒரு அறையில் நதிக்குடியை சேர்ந்த வேம்பு (வயது 60) என்பவர் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து தீப்பற்றி எரிந்தது. இதில் வேம்பு உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

கடந்த சில நாட்களில் மயிலாடுதுறை, அரியலூர், ஓசூர் அருகே நடந்த பட்டாசு வெடி விபத்துகளை தொடர்ந்து தற்போது நடந்துள்ள இந்த சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா மாரனேரியை அடுத்த கிச்சநாயக்கன்பட்டி மற்றும் மங்களம் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலைகளில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story