திறப்பு விழாவிற்கு தயாரான ஒன்றிய அலுவலக கட்டிடம்


திறப்பு விழாவிற்கு தயாரான ஒன்றிய அலுவலக கட்டிடம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

கோத்தகிரியில் ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. அதன் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. அதன் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

பழைய கட்டிடம் அகற்றம்

கோத்தகிரி காந்தி மைதானத்திற்கு அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு 11 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அலுவலகம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்த காரணத்தால் மேற்கூரை பழுதடைந்து, மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி வந்தது. இதனால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மிகுந்த சிரமத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் முக்கியமான ஆவணங்களை பாதுகாத்து வைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த ஒப்படைப்பு வருவாய் நிதி திட்டத்தின் கீழ் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி, அங்கு 2 தளத்துடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக ரூ.3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பணிகள் மும்முரம்

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது கட்டிட பணி 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக ஊராட்சிமன்ற பொதுக்கூட்ட அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வர்ணம் பூசும் பணி, ஜன்னல்களுக்கு கண்ணாடிகள் பொருத்தும் பணி உள்ளிட்டவையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் புதிய அலுவலகத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, திறப்பு விழா நடைபெறும். அதன்பிறகு அந்த கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட தொடங்கும் என்றனர்.


Next Story