வாஜ்பாய் பிறந்த நாள் விழா
மாவட்ட பா.ஜனதா சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
பனைக்குளம்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை கட்சி மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் நடத்திட பா.ஜனதா பிரமுகரும், உயர் நீதிமன்ற வக்கீலுமான எஸ். சண்முகநாதன் ஏற்பாடுகள் செய்திருந்தார். இதற்காக பட்டணம் காத்தான் இ.சி.ஆர். சாலை அருகில் உள்ள பா.ஜனதா 100 அடி கொடிகம்பத்தின் அருகே வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த அமர் பிரசாந்த் ரெட்டி கலந்து கொண்டு வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து ராமேசுவரம் சென்ற அவர் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்றார். அவரை அப்துல்கலாம் குடும்பத்தின் சார்பில் பேரன் சலீம் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மண்டபம் ஒன்றிய தலைவர் விக்ராந்த், மண்டபம் ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகநாதசேதுபதி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.