பறவை காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தர்கள்


பறவை காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தர்கள்
x
தினத்தந்தி 23 Feb 2023 7:00 PM GMT (Updated: 23 Feb 2023 7:00 PM GMT)

பழனி முருகன் கோவிலுக்கு வால்பாறை பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல்


உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 4-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பல்வேறு காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் திருவிழா முடிந்த நிலையிலும் பழனிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பக்தர்கள் குழுவை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பழனி சண்முகநதியில் இருந்து 50 பக்தர்கள் பால்காவடி எடுத்தும், 15 பக்தர்கள் அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். மேலும் 9 பக்தர்கள் ராட்சத கிரேன் உதவியுடன் பறவைக்காவடியில் வந்தனர்.

சண்முகநதியில் இருந்து காரமடை, சுப்பிரமணியபுரம் ரோடு, புதுதாராபுரம் ரோடு, பஸ்நிலையம் வழியே அடிவாரம் பகுதிக்கு பக்தர்கள் வந்தனர். பின்னர் கிரிவலம் வந்து கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கடந்த 46 ஆண்டுகளாக எங்கள் பகுதியை சேர்ந்த பக்தர்கள் தைப்பூச திருவிழாவுக்கு பின் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறோம். அதன்படி 47-ம் ஆண்டாக இந்த ஆண்டு வந்து சாமி தரிசனம் செய்தோம் என்றனர்.


Next Story