½ ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்து ரூ.1,000-க்கு விற்பனை


½ ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்து ரூ.1,000-க்கு விற்பனை
x

உடுமலை அருகே ½ ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்து ஒட்டுமொத்த விளைச்சலை ரூ.1,000-க்கு விவசாயி விற்பனை செய்த அவலம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர்

உடுமலை அருகே ½ ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்து ஒட்டுமொத்த விளைச்சலை ரூ.1,000-க்கு விவசாயி விற்பனை செய்த அவலம் அரங்கேறியுள்ளது.

ரசாயன உரங்கள்

மண்ணை நம்பி விதைத்து விட்டு, விண்ணை நம்பி மழைக்காக காத்திருந்த நம் முன்னோர்களின் விவசாய முறைகள் சோடை போனதில்லை. ஏனென்றால் தரமான விதைகள், உரம், பூச்சி விரட்டி என அனைத்தையும் அவர்களே உற்பத்தி செய்தார்கள். மண்ணை தெய்வமாக மதித்து வணங்கினார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்றப்பட்ட வீரிய ஒட்டு விதைகள், ரசாயன உரங்கள், கடும் விஷத்தன்மை கொண்ட பூச்சி மருந்துகள் என அனைத்துமே மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களாக மாறிவிட்டன.

அதேநேரத்தில் உற்பத்திச்செலவு பல மடங்கு அதிகரித்து, விற்பனை விலை போதுமானதாக இல்லாத நிலையே உள்ளது. இதனால் பலரும் விவசாயத்தை கைவிட்டு மாற்றுத்தொழில் தேடிப்போகும் நிலை உள்ளது. டாக்டர் பிள்ளை டாக்டராக விரும்புகிறார். என்ஜீனியர் பிள்ளை என்ஜீனியர் ஆக விரும்புகிறார். ஆனால் விவசாயி பிள்ளை விவசாயி ஆக விரும்புவதில்லை என்ற நிலையே உள்ளது.

உடுமலை அருகே ½ ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்து ஒட்டுமொத்த விளைச்சலை ரூ.1,000-க்கு விவசாயி விற்பனை செய்த அவலம் அரங்கேறியுள்ளது.

இந்தநிலையில் உடுமலை அருகே ½ ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயி சரியான விளைச்சல் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக ரூ. 1000-க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி தரப்பில் கூறியதாவது:-

'கடந்த காலங்களில் பருவமழைக் காலத்தில் விதைத்து விட்டு வீட்டுக்கு வந்தால் அறுவடை செய்வதற்கு சென்றால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட இடைவெளியில் உரமிடுதல் மற்றும் மருந்து தெளிக்காவிட்டால் விளைச்சல் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அதேநேரத்தில் உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டும் விளைச்சல் எடுக்க முடியாத அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

½ ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்ய ¾ கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதை ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதுதவிர உழவு, ஆள் கூலி, உரம், பூச்சி மருந்து என ½ ஏக்கரில் ரூ.25 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. கோடையில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டோம். ஆனால் காய்கள் சிறுத்து வெள்ளை பாய்ந்துள்ளதால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 7 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகக்குறைந்த அளவிலான, தரமற்ற காய்களே கிடைத்தது. இதனால் வயலை சுத்தம் செய்யும் நோக்கில் வெறும் ரூ.1000 க்கு விற்பனை செய்தோம். இந்த நிலைக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. தரமற்ற விதைகளா? வேறு எதுவும் வினோத நோய் தாக்குதலா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனி தர்பூசணி சாகுபடி செய்வதை கைவிடுவதா அல்லது விவசாயத்தையே கைவிடுவதா என்று எண்ணுமளவுக்கு மனது சோர்வடைந்துள்ளது'.

இவ்வாறு அவர் கூறினர்.


Related Tags :
Next Story