குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? - கி.வீரமணி கேள்வி


குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? - கி.வீரமணி கேள்வி
x

இமாசல பிரதேச தேர்தலுடன் சேர்த்து குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? என கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், இமாச்சல பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி, அத்துடன் சேர்த்து ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களிலும், ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி போன்ற சட்ட வல்லுனர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிட முடியும். ஆனால், அதே அளவு உறுதியான நம்பிக்கை, குஜராத்தைப் பொறுத்தவரையில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா போன்றவர்களுக்கு இன்னும் ஏற்படவில்லையோ என்ற சந்தேகமே அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பஞ்சாபைப் போல அங்கே 'ஆம் ஆத்மி கட்சி'யின் பிரசாரம் கடுமையாக இருக்கிறது. 5 ஆண்டுகள் ஆட்சியின் மீது உள்ள மக்களின் எதிர்ப்பு - அதிருப்தியை தம்வசமாக்கி, பல தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அள்ளி வீசுகிறார்.

எனவே, குஜராத் தேர்தலுக்கு இம்முறை புதிய வித்தைகளைக் கையாளவேண்டும் என்பதால், ஒருவேளை இந்தத் தேர்தல் தேதி அறிவிப்பு காலதாமதம் ஆகிறது போலும். எப்படி இருந்தாலும், முன்புபோல, எல்லாக் காலத்திலும் எல்லா வித்தைகளும் பலிக்குமா? என்பதும் விவரமறிந்தவர்கள் கேட்கக்கூடிய கேள்விதான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story