தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
![தீக்குளிக்க முயன்ற தொழிலாளி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி](https://media.dailythanthi.com/h-upload/2022/05/30/713815-k-3.webp)
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மனு அளிக்க வந்த ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர், பாரூர் அடுத்த காராமூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிமுத்து (வயது 54) என்பதும் இவருக்கு செவத்தா (45) என்ற மனைவி, இரு மகன், மற்றும் ஒரு மகள் இருப்பதும் தெரிய வந்தது. மாரிமுத்து காராமூரில் 20 சென்டில் வீடு, நிலம் உறவினர்கள் 2 பேர் அபகரித்து வீடு கட்டி கொண்டதும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில், கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதையடுத்து அவரை பாரூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பிய போலீசார், அவரது பிரச்சினை குறித்து விசாரிப்பதாக தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.